மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு வடிவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை படைத்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைவிடவும் பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சச்சினை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் கொண்டாடி வருகின்றனர்.
90களில் சச்சின் டெண்டுல்கரை நம்பி மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி இருந்தது என்று சொல்ல முடியும். வளர்ந்து வந்த இந்தியாவுக்கும், அன்றைய இளைஞர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் ஒரு நம்பிக்கையாக இருந்தார். இதன் காரணமாகவே சச்சின் டெண்டுல்கர் உணர்வு ரீதியாக ரசிகர்கள் பார்த்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், இன்றும் சச்சின் மீதான வெளிச்சம் கொஞ்சம் கூட குறையவில்லை.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சொந்த மண்ணில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. ஷேன் வார்னே பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஷாட்டை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளின் போதே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.