ஈரோடு வெட்டுக் காட்டுவலசு, மடிக்காரர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (41). இவர் வீரப்பன் பாளையம் பகுதியில் கிருத்திகா ட்ரை கிளினர்ஸ் என்ற துணி சலவை மற்றும் அயர்னிங் செய்யும் கடையை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி கடையில் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலையில் சரவணன் கடையை வந்து பார்த்த போது கடையின் முன் பக்க சட்டர் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சரவணன் வீரப்பன் சத்திரம் போலீசில் தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் போலீசாருக்கு முக்கிய தடையம் கிடைத்தது . அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில்
சூரம்பட்டி வலசு, கோவலன் வீதியைச் சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து வீரப்பன் சத்திரம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டன் மீது ஏற்கனவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு நிலுவைவில் உள்ளது. பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.