நாமக்கல்:நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல், தலைமைவகித்தார். குழுக்கூட்டத்திற்கு விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உழவனின் நண்பர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும், பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டுவளர்ச்சித் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள். துறை சார்ந்த பயிற்சிகள், இடுபொருள் குறித்தும், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் உழவனின் நண்பர்களுக்கும்விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.கூட்டத்தில் நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர், வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி, ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விளக்கமளித்தார்.