.
நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் சீமான் கூறினார்
சென்னையில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான கேள்வியை நிருபர்கள் கேட்டதற்கு சீமான், “இதுவரை கேள்விகளை கேட்டீர்கள், தற்போது கேவலத்தை கேட்கிறீர்கள். அந்த புகாரில் அரசியல் பின்னணி இருக்கலாம். என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை அமைதியாக கடந்துபோக நினைக்கிறேன். உலகம் முழுவதும் என்னை நேசிக்கும் மக்கள் என எனக்கு பல கோடிகணக்கான குடும்பங்கள் உள்ளன. எனக்கு மனைவி, 2 பசங்க. எனக்கும் குடும்பம், சொந்தங்கள் இருக்கின்றன. திரும்ப, திரும்ப அதைப்பற்றி பேசுவது ரொம்ப கேவலமாக இருக்கிறது. என்னை சார்ந்தவர்களின் மனநிலை என்னவாக இருக்கும். நான் எவ்வளவோ வலிகளை தாங்கி கடந்து வந்தவன்”, என்றார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு நேற்று வந்தார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கீழ்பவானி விவசாயிகளையும் சந்தித்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், நானும் போட்டியிடுவேன். இல்லையென்றால் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். அந்த தொகுதியில் போட்டியிட ஒரு தங்கையை தேர்வு செய்து வைத்துள்ளேன். இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. வளரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியா கிடையாது. 2 கோடிக்கு பேருக்கு கடந்த 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. மக்களை நேரடியாக பிரதமர் சந்திக்காமல் கண்ணாடி அறைக்குள் இருந்து வானொலி மூலமாக பேசிவிட்டு செல்கிறார்.
தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 80 முதல் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக கூறி வருகிறார்கள். அதில் 8 சதவீதத்தை சொல்லுங்கள் என்றால், கூறமுடியவில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்கள். எதுவுமே இல்லாதவர்கள், கட்சிக்காரராக இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள் போல.
ராஜ்பவனில் இருக்கக்கூடியவர் கவர்னர் ரவி கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் இருக்கக்கூடியவர். எதையாவது பேசி வருகிறார். சனாதன கொடுமைக்கு எதிராகதான் வள்ளலார், சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பை தொடங்கினார். அவரையே சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்று கவர்னர் கூறினார். நல்ல மனநிலையில் இருப்பவர் இப்படி பேசுவாரா?
நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். என் கொள்கை முடிவு தனித்து நிற்பதுதான். நான் யாரை தலைவராக ஏற்று இருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எனது தலைவரின் புகைப்படத்தை சுதந்திரமாக காட்ட முடியாது. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரை எனது தலைவராக ஏற்று இருப்பதால், எங்களுடன் யாரும் கூட்டணி வைப்பதில்லை. அதேசமயம் எனது கொள்ளை முடிவுகளை மற்றவர்கள் ஏற்று வந்தால் கூட்டணியில் சேர்த்து கொள்வேன்.
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கட்சிகளுடன் எதற்காக கூட்டணி வைக்க வேண்டும் என்று தி.மு.க.வினரிடம் கேள்வி கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை சேர்ந்த 6 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒரு கட்சியை மட்டும் குறி வைத்து நடவடிக்கை எடுக்கும்போது, அது அரசியலாகதான் தெரிகிறது.
ஊழல், லஞ்சத்தை பற்றியே பல தலைவர்கள் பேசி வருகின்றனர். அதை ஒரே நொடியில் தடுத்துவிட முடியும். ஆனால் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுப்பது குறித்து எந்த தலைவரும் பேசுவதில்லை. ஊழல், லஞ்சம் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டது. வாக்குக்கு காசு கொடுப்பது மூலமாகதான் ஊழல் விதைக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் போட்பாடு இந்து, இந்தியா, இந்தி. அவர்கள் நாடற்றவர்கள். நாம் நாட்டின் பூர்வீக குடிகள். ஆனால் அவர்களுடன் சேர்ந்து நமது மக்களும் செயல்படுவதால் அவர்களுக்கு சாகதமாகவே அனைத்தும் நடக்கிறது.
தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சில நாட்களாக நடக்காமல், இடை நிறுத்தம் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இதுபோன்ற அரசியல் ஆந்திராவில்தான் பிரதிபலிக்கும். தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடக்க உள்ளதாக கவனகுறைவாக இருந்துவிட வேண்டாம் என்று என்னிடம் கூறி இருக்கின்றனர். மற்ற 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அங்கு கர்நாடக தேர்தலைபோலவே பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வாய்ப்பு இருக்கிறது.
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பலை உள்ளது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்களிடம் எழுச்சி வர வேண்டும். மக்கள் மத்தியில் இந்த எண்ணத்தை வரவைக்க வேண்டும். அதைவிட்டு பெங்களூரு, பீகாரில் சென்று கூட்டம் கூட்டுவது என்று இருக்கக்கூடாது. இந்தியா கூட்டணி சாதனை படைக்குமா? என்று கேட்டால், சாதனை படைக்க வாழ்த்துகிறேன். ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.சாலை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள் என நாடே தெருவில் நின்று போராடும் நிலையில், நல்லாட்சி நடப்பதாக கூறுவது சரியா? காலை உணவு திட்டத்தில் உப்புமா மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு என்ன வளம் கிடையாது? காலையில் குழந்தைக்கு உணவுக்கூட இல்லாத ஏழ்மை நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.நீட் தேர்வு முறையை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அப்போது கூட்டணியில் இருந்ததும் தி.மு.க. ஆனால் பெரும்பான்மையை பயன்படுத்தி அதை செயல்படுத்தியது பா.ஜ.க.
இந்தியாவில் தரமான டாக்டர்களை உருவாக்குவதற்காக நீட் தேர்வு நடத்த அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு எதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டது? இதுவரை உள்ள கல்வி முறையில் தரமான டாக்டர்கள் இல்லையா? பிரதமருக்கு நாளைக்கே உடல்நிலை சரியில்லை என்றால் நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற டாக்டரிடம் மட்டும்தான் சிகிச்சை பெறுவாரா? எனவே நீட் தேர்வால் எந்த தகுதியும் அதிகரித்து விடாது. சீமான் கூறினார்.vidio https://www.youtube.com/live/Pxqt4wc5ErM?si=wEaJ-jGLLLE1wZEV