நம்பியூர்:கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு கரைகளிலும் முழுக்க மண்ணால் கட்டப்பட்டதுஇதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இந்த வாய்களின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த வாய்க்காலில் ஆண்டுக்கு இரு முறை ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை ஒரு முறையும், ஜனவரி 1 -ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரை மற்றொரு முறையும் தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த 2013-ம் ஆண்டில் அரசு கீழ்பவானி கால்வாயின் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தியதால் அப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் கான்கிரீட் தளம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கடந்த மே 1-ந் தேதி இந்த திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டது.இந்த திட்டம் தொடங்கினால் கீழ்பவானி பாசன பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டலை கடுமையாக பாதிக்கும் என இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்கவும் வலியுறுத்தியும், அதற்கான அரசாணையை 10-ந் தேதி வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் 26-வது மைல் கல் பகுதியில் இறங்கி கரும்பு, தேங்காய், வாழைத்தாருடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பேசிய விவசாயிகள் எங்களது கோரிக்கையை ஏற்க விட்டால் 11-ந் தேதி ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிடுவோம். மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புறக்கணிப்பு செய்வோம் என கூறினர்.