ஈரோடுசென்னிமலையில் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்து ரூ.69.56 இலட்சம் மதிப்பீட்டில்செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி, காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கைத்தறித்துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாமினை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.மணிஷ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், விவசாய கடன் தள்ளுபடி, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டம் இப்போது நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் உள்ள 31,000 அரசு பள்ளிகளில் பயிலும், 17,00,000/- மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.
மேலும், பொதுமக்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் மக்களை தேடி மருத்துவ திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மக்களின் அன்பை பெற்ற மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கடந்த 1999 ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருமுன் காப்போம் என்ற உன்னதமான திட்டத்தினை கொண்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதன்படி கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்ட வருகின்றன.
அதனைத் தொடர்ந்து. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கைத்தறித்துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயம் மற்றும் எழும்பு சம்மந்தப்பட்ட நோய்கள் தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இசிஜி, எக்ஸ்ரோ மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இம்மருத்துவ முகாமினை நெசவாளர்கள் தங்களது உடலை பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் கூறும் மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றி நலமுடனும், முழு ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமெனவும், மேலும், சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர் பிறந்த ஊரான சென்னிமலையில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்மைத்துறைக்கு அடுத்த படியாக கைத்தறித்துறை செயல்பட்டு வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பெற்றுக்கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் , சென்னிமலை, சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கைத்தறி நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்து, சங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார், மேலும், கைத்தறித்துறையின் சார்பில், சென்னிமலை தொழிலியல், காளிக்காவலசு தொழிலியல், சென்னிமலை இந்திரா, மைலாடி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.63,06,000/- மதிப்பீட்டிலான தொழில்நுட்ப தறி உபகரணங்களையும், 5 நெசவாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையினையும் மற்றும் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், 13 கூட்டுறவு நெசவாளர்களுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.6,50,000/- மதிப்பீட்டிலான கடனுதவியினையும் என மொத்தம் ரூ.69,56,000/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள், வேளாண்மை - உழவர் நலன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறைகளின் சார்பில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெப்பிலி துணை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 250 மெ.டன் அளவிலான குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்விழாவில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி, செயலர் துணை இயக்குநர் (ஈரோடு விற்பனை குழு) சாவித்ரி, கைத்தறித்துறை உதவி இயக்குநர் பெ.சரவணன், துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) மகாதேவன், உதவி இயக்குநர் (வேளாண்மை) சாமுவேல், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் சீனிவாசன், பெருந்துறை வட்டாட்சியர் பூபதி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.