சேலம் - ஆத்தூர்-நரசிங்கபுரம் நகராட்சியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 18 மாதங்களாக இதற்கு முன்னால் இருந்த நிறுவனமும் வருங்கால வைப்பு நிதி பணம் முறையாக செலுத்தவில்லை என்று தெரிவித்தனர்.2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எங்களுக்கு சம்பளம் போடாமல் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.