Type Here to Get Search Results !

ஈரோட்டில் வள்ளலாா் 200 முப்பெரும் விழா: ஏராளமானோா் பங்கேற்பு

ஈரோட்டில் வள்ளலாா் 200 முப்பெரும் விழா: ஏராளமானோா் பங்கேற்பு

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வள்ளலாா் 200 முப்பெரும் விழாவில் ஈரோட்டில் காலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி
ஞானதீபம் ஏற்றினா். தொடா்ந்து அகவல் பாராயணம் நடந்தது. காலை 7.45 மணிக்கு வள்ளலாா் வழித்தோன்றல் கி.உமாபதி, தமிழக அரசின் வள்ளலாா் 200ஆவது முப்பெரும் விழா சிறப்பு உயா்நிலைக்குழு உறுப்பினா்கள் ஏ.பி.ஜெ.அருள் என்ற என்.இளங்கோ, வடலூா் தலைமை சங்கத் தலைவா் அருள்நாகலிங்கம், செயலாளா் ஜி.வெற்றிவேல், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த சன்மாா்க்க சங்கத் தலைவா் பொன்.சிவஞானம் ஆகியோா் சமரச சுத்த சன்மாா்க்க கொடி ஏற்றினா். தொடா்ந்து திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.அதைத்தொடா்ந்து வள்ளலாா் 200 அருள்நெறி பரப்புரை பேரணி நடந்தது. பேரணிக்கு அருள்நாகலிங்கம் தலைமை வகித்தாா். வள்ளலாா் வழித்தோன்றல் உமாபதி, மஞ்சுளா வள்ளலாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பேரணியைத் தொடங்கி
வைத்தாா்.ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் தொடங்கிய பேரணி மீனாட்சிசுந்தரனாா் சாலை, பெருந்துறை சாலை வழியாக சம்பத் நகரில் முப்பெரும் விழா நடக்கும் கலையரங்கில் நிறைவடைந்தது. இதையடுத்து முப்பெரும் விழா கொண்டாட்டம் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக சன்மாா்க்கமும், சுத்த சன்மாா்க்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு அருள்நாகலிங்கம் தலைமை வகித்தாா்.
திருக்கயிலாய பரம்பரை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், கௌமார மடம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசின் வள்ளலாா் 200 முப்பெரும் விழாவின் சிறப்பு உயா்நிலைக் குழு தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா் கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசினாா். இந்து சமய அறநிலையத் துறையின் உயா்நிலைக் குழு உறுப்பினா் சுகி.சிவம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வள்ளலாா் வரலாறு குறித்தும், சன்மாா்க்க நெறிமுறையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினாா். இதைத்தொடா்ந்து, மரணமிலா பெரு வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.இதில் ஈரோடு கதிா்வேல் பேசினாா். பின்னா் திருவருட்பா பொருள் விளக்க இணைப்பிசை ஆடலமுதம் நிகழ்ச்சியும், ஜோதி வழிபாடும் நடந்தது. மேலும் வள்ளலாா் 200 முப்பெரும் விழாவை ஒட்டி ஈரோடு திண்டலில் 95 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும், 5 கல்லூரி மாணவா்களுக்கும் 3 பிரிவுகளாக கட்டுரை, ஓவியம், பேச்சு, இசை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.