ஈரோடு மாவட்டம் வெள்ளோடு தாச்சான்கரையை சேர்ந்த பழனிசாமி மகள் கவுசல்யா(26). இவரது கணவர் முத்துசாமி, பவானி வைரமங்கலத்தில் விஏஓ.வாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். கவுசல்யா கடந்த 2 ஆண்டுகளாக அவரது பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் முத்துசாமி, தனது மனைவியிடம் வேலைக்கு செல்லும் போது வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து தாச்சான்கரையில் இருந்த கவுசல்யா, அவரது மகனை வீட்டின் வெளியே உட்கார வைத்து விட்டு, ஹாலில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் கவுசல்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஈரோடு ஆர்டிஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.