மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து
ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் 50 பேர் கைது மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான நடந்த கொடுமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில்
தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ரெயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும் போலீசரின் தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தனர்.இந்நிலையில் காளைமாட்டு சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அறிவு தமிழன், மேற்கு மண்டல செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் நிர்வாகிகள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து ஊர்வலமாக ரெயில் மறியலுக்கு செல்ல தொடங்கினர். அப்போது காளை மாட்டு சிலை பகுதியில் தயாராக இருந்த டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். அதை மீறி நிர்வாகிகள் செல்ல முயன்றதால் வேனில் 5 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.