தேமுதிக துணைச் செயலாளர் எல் கே சதீஷ் ஈரோட்டில் இன்று நிருபர்கள் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் உள்பட அரசு எந்திரமே இங்கு தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது .எனவே பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படை வர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதேபோல் பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம் .தமிழக இளைஞர்களுக்கு நிறுவனங்கள்
கண்டிப்பாக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இங்கு உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால் வட மாநிலத்தவர்கள் எதற்காக இங்கே வரப் போகிறார்கள். இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது திமுகவுக்கு புதியது அல்ல. அவர்களுக்கு பழக்கப்பட்டது தான். ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவதை எதிர்த்து தான் இந்த தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது.இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்குவாதம்
தேமுதிக பணிமனை திறப்பு விழா இன்று காலை நசியனூர் ரோட்டில் நடைபெற்றது. இதற்காக நசியனூர் சாலையின் இரு புறம் தே.மு.தி.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தது. இதற்கான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனை எடுத்து அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தினர். அதற்கு நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.