ஈரோடு, பிப். 10 -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்காக 1500 மின்னணு வாக்குபதி மந்திரங்கள், கட்டுப்பாடு கருவிகள், விவி பேட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகள் அனைத்தும் ஆர்டிஓ அலுவலக வளாக எந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பொறியாளர்கள் அந்த கருவிகளில் பழுது ஏற்பட்டுள்ளதா என்று சரி பார்த்தனர். இந்த பணி முடிந்ததும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னணியில் மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. அதன் பின்னர் வாக்குப்பதிவு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை மாநகராட்சி பள்ளியில் இருந்து எடுத்து ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் உள்ள எந்திரக் கிடங்கில் வைக்கும் பணி நடந்தது.
தேர்தல் காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் இந்த பணிகளை பார்வையிட்டார். ஈரோடு தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி, டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா உடன் இருந்தனர். ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாடு கருவிகள், 8 விவி பேட் எந்திரங்கள் மாநகராட்சி பள்ளியில் இருந்து ஆர்டிஓ அலுவலக வளாக எந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டது.