பாம்பு கடித்து முதியவர் பலி
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி, கரிய கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(62). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து அதே பகுதியில் ஒரு தோட்டத்தில் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார்.
இந்திலையில் புது வருடம் அன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரைப் பாம்பு கடித்து விட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாரிமுத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மாரிமுத்து இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.