ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி அம்மன் நகர், ஈ.பி. ஆபிஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 22 ) . கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது. அதேபோல் சிவகிரி திரு.வி.க. பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 19 ) இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று இரவு அருண்குமார், மணிகண்டன் இருவரும் கொடுமுடிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர்.
தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் இருவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது போல் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உடலையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.