அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோட்டில் ஆஞ்சநேயர் திருவீதி உலா
ஈரோட்டில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் திருவீதி உலா நேற்று நடந்தது. ஆஞ்சநேயர் திருவீதி உலா அனுமன் ஜெயந்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் திருவீதி உலா நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலம் பவானி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மீனாட்சி சுந்தரனார் ரோடு, மேட்டூர் ரோடு, முனிசிபல் காலனி, பெரியவலசு நால்ரோடு, சத்தி ரோடு, தெப்பக்குள வீதி, அசோகபுரம் வழியாக பவானி ரோடு வந்து மீண்டும் கோவிலில் முடிவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். வடை மாலை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா கணபதி அபிஷேகமும், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. மதியம் 1.30 மணிக்கு மூலவருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்படுகிறது. அதன்பின்னர் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. இதையொட்டி மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு அலங்காரமும் செய்யப்பட்டு உள்ளன. மேலும் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு வார வழிபாட்டுக்குழு சார்பில் அன்னதானம், லட்டு, கயிறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.