ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள மேவாணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(39). சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். அவரது மனைவி அகமதாபாத்தில் படித்து வருகிறார்.நேற்று காலை டாக்டர் சக்திவேல் நீண்ட நேரமாகியும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்போடப்பட்டு இருந்தது.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது டாக்டர் சக்திவேல் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டாக்டர் சக்திவேல் சாவுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்