தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து 500 கன அடி நீர் வெளியேற்றம்
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும்
அணைக்கு வினாடிக்கு 983 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி,
பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.41 அடியாக உள்ளது.